ஷா ஆலம், ஆகஸ்ட் 13 - உணவு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிலைப்படுத்தவும் தொடங்கப்பட்ட சிலாங்கூர் உணவு சேமிப்புக் கிடங்கில் (GMS) தற்போது சுமார் 8,000 டன் அரிசி இருப்பு உள்ளது .
இந்த அவசரகால இருப்பு மாநில மக்களின் தற்போதைய தேவையில் 15 முதல் 20 விழுக்காடு வரை மூன்று மாத காலத்திற்குப் பூர்த்தி செய்யக்கூடும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"ஒவ்வோர் ஆண்டும் சிலாங்கூர் உணவு சேமிப்புக் கிடங்கில் உணவு இருப்பை நாங்கள் அதிகரித்து வருகிறோம்; இது தவிர தற்போது கூட்டரசு அரசாங்கத்திடமும் உற்பத்தியாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களிடம் 290,000 டன் அரிசி இருப்பு உள்ளது .
நாங்கள் அத்தியாவசிய உணவுகளை மட்டும் உட்படுத்தியிருக்காமல் 2024 முதல் சேகரிக்கப்பட்டு வரும் இறைச்சி, மீன் போன்ற புரத உணவையும் சேமித்து வருகிறோம்."
மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய ஒரு வலுவான உணவு இருப்பைக் கொண்டிருப்பதே எங்களது எதிர்பார்ப்பு என்று இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
" எங்கள் இருப்பை அதிக நாட்கள் சேமிக்க முடியாது ஏனெனில் அவை கெட்டுவிடும் எனவே அவை கெட்டுப்போவதற்கு முன்பு ஜுவாலான் ஏசான் ரஹ்மா (Jualan Ehsan Rahmah) அல்லது ஏசான் மார்ட் (Ehsan Mart) சந்தைகளில் விற்பனைக்கு வழங்குவோம். அரிசியும் முறையாகப் பதப்படுத்தப்பட்டு நன்றாகச் சேமிக்கப்பட வேண்டும் " என்றார் .
சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் துறைமுகத்தில் உள்ள தியோங் நாம் (Tiong Nam) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வசதியைப் பயன்படுத்தி PKPS-ஆல் நிர்வகிக்கப்படும் உணவு சேமிப்புக் கிடங்கைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.







