ஷா ஆலம், மே 21: மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வர்த்தகத் துறைகளுக்கும் உதவும் ஒரு நடவடிக்கையாக, சிலாங்கூர் தாங்குதிறன் வலுவூட்டல் திட்டத்தின் (Pakej Pengukuhan Daya Tahan Selangor) முன்னேற்றத்தை மேன்மைதங்கிய சிலாங்கூர் சுல்தானிடம் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்தார்.
இன்று கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷாவில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் துசுகி மொக்தாருடன் இணைந்து சந்தித்தபோதே இந்தச் சமர்ப்பிப்பு நிகழ்ந்தது.
"சட்டத்துறைத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு, சிலாங்கூர் தாங்குதிறன் வலுவூட்டல் திட்டத்தின் முன்னேற்றத்தையும் சுல்தானிடம் அடியேன் சமர்ப்பித்தேன்.
"மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வணிகத் துறைகளுக்கும் உதவும் வகையில் இந்த மீட்சித் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது," என்று அவர் இன்று தமது பேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்தார்.
அமிருடின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்த சமர்ப்பிப்பை சிலாங்கூர் சுல்தான் ஏற்றுக் கொண்டார். மேலும், மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுல்தான் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அதே வேளையில், தம்மையும் சட்டத்துறைத் தலைவரையும் சந்திக்க அனுமதி வழங்கிய சுல்தானின் பேரருளுக்கு அமிருடின் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் துங்கு பெர்மைசூரி ஆகியோர் தொடர்ந்து நல்ல உடல்நலம், நல்வாழ்வு, ஞானம் மற்றும் இறையருள் பெற்று, முழு இறையாண்மையுடனும் புகழுடனும் சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்து அரணாக விளங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.
மக்களின் உணவுப் பாதுகாப்பை வலுப் படுத்துதல், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்தல் மற்றும் அதிகப்படியான பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக கடந்த ஏப்ரல் மாதம், 141 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை அமிருடின் தாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, பொதுப் போக்கு வரத்துப் பயன் பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும், மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இலக்கு வைக்கப்பட்ட உதவிகளை வழங்குவதையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது.
கடந்த மாதம் அவர் அறிவித்த சிலாங்கூர் தாங்குதிறன் வலுவூட்டல் திட்டத்தின் முதல் கட்டம், வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப் படவுள்ளது.
இது ஜுவலான் ஏசான் ரஹ்மா (Jualan Ehsan Rahmah), கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு (Baucar Kita Selangor), பொதுப் போக்குவரத்துக் கட்டண மானியம், விவசாயத் துறைக்கான ஆதரவு உதவி, சிலாங்கூர் கூட்டுறவுத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சிலாங்கூர் உணவுக் கிடங்கு (Gudang Makanan Selangor) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
சிலாங்கூர் சுல்தானை சந்தித்து மாநிலத்தின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முன்னேற்றத்தை சமர்ப்பித்தார் மந்திரி புசார்
22 மே 2026, 4:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பந்திங், ஶ்ரீ செர்டாங் உட்பட 7 இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Media Selangor Team
29 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Media Selangor Team
26 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 5 இடங்களில் தொடரும்
Media Selangor Team
10 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



