கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 : பி.கே.ஆர் (PKR) கட்சியின் வோங் ஜென் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியது.
அத்தொகுதி காலியாகியிருப்பதாக நேற்று மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் தெரிவித்ததாக தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
"கூட்டரசு அரசியலமைப்பின் 54(1)- பிரிவின் படி, இந்தத் தற்காலிக காலியிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று மக்களவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார்.
அதன்படி, P.104 சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு எந்தவொரு இடைத்தேர்தலும் நடத்தப்படாது" என்று கூறப்பட்டது.
மே 2018 முதல் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த வோங், நேற்று முன்தினம் தமது பதவி விலகலை அறிவித்தார்.
கடந்த புதன்கிழமை மக்களவைத் தலைவர் ஜொஹாரியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.




