
ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — சிலாங்கூர் கபடி குழு 2026 சுக்மாவில் இரு தங்கப் பதக்கங்களை வெல்லும் என நம்பிக்கை கொண்டுள்ளது.
இவ்வாண்டு அக்குழு இதுவரை பங்கேற்ற ஆட்டங்களின் சிறப்பான அடைவுநிலையை கொண்டு அந்த நம்பிக்கையை வைத்துள்ளதாக சிலாங்கூர் குழுவின் நிர்வாகி வி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ஆடவர் , மகளிர் ஆகிய இரு குழுக்களும், கடந்த 2024-ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியைக் காட்டிலும் தற்போது சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பங்கேற்ற போட்டிகளில் இரு குழுக்களும் பெற்ற வெற்றிகளின் அடிப்படையிலும் , சிலாங்கூர் சுக்மாவில் தங்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு குழுக்களும் இரண்டாவது இடத்தைப் பிடித்தன. முதலிடம் பிடித்த அணியைவிட ஒரு புள்ளி வித்தியாசத்திலே அந்த வெற்றியைத் தவறவிட்டதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறிய ரவிச்சந்திரன், இந்த விளையாட்டின் வளர்ச்சி இந்திய வீரர்களை மட்டுமே உட்படுத்தியிருக்கக் கூடாது என்றார்.
தற்போது மலாய் , சீன சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்தும் கபடி விளையாட்டுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையை சந்தித்துள்ளதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் கபடி விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரவிச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.









