ஷா ஆலம், ஆகஸ்ட் 5 - இவ்வட்டாரத்தின் முன்னணி சொகுசு கப்பல் சுற்றுலா மாநாடான 'Seatrade Cruise Asia', வருகிற நவம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை மலேசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ளது .
வழக்கமாக சிங்கப்பூரில் மட்டுமே இந்த உயர்மட்ட மாநாடு நடத்தப்பட்டு வந்தது.
இம்முறை கோலாலம்பூரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து, கிள்ளான் துறைமுக கப்பல் முனையத்திற்கு அனைத்துலக கப்பல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த வல்லுநர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை ஈர்க்க முடியுமென சிலாங்கூர் சுற்றுலா துறையின் (Tourism Selangor) தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் (Chua Yee Ling) தெரிவித்தார்.

அதன் வழி,சிலாங்கூரின் கப்பல் சுற்றுலாத் துறை மிகப்பெரிய ஓர் ஊக்கத்தினைப் பெறுமென அவர் கூறினார்.
2026-ஆம் ஆண்டுக்கான இந்த சொகுசு கப்பல் சுற்றுலா மாநாடு முதல் இரு நாட்கள் கோலாலம்பூரில் நடைபெறும். மூன்றாவது நாளில் பிரதிநிதிகள் அனைவரும் PKCT-கிள்ளான் துறைமுக கப்பல் முனையத்திற்குப் பயணம் செய்து, அங்கிருந்து பினாங்கிற்கு கப்பல் மூலம் பயணிப்பார்கள் என்றும் சுவா யீ லிங் தெரிவித்தார்.
உலகளாவிய கப்பல் சுற்றுலாத் துறையினருக்கு சிலாங்கூரின் சிறப்புகளைக் காண்பிப்பதற்கான இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, சிலாங்கூர் சுற்றுலாத் துறை சார்பில் பாரம்பரிய கலாச்சார நடன நிகழ்ச்சிகள், உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தை, மற்றும் இலவச மலேசிய காபி மற்றும் உணவு சார்ந்த சிறப்பான உபசரிப்புகள் முனையத்திலேயே ஏற்பாடு செய்யப்படவுள்ளன .
அனைத்துலக அளவில் மிகப்பெரிய சொகுசு கப்பல்களைக் கையாளக்கூடிய உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை கிள்ளான் துறைமுக முனையம் பெற்றுள்ளது.
இது சிலாங்கூருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
மலேசியாவில் கிள்ளான் துறைமுகம், பினாங்கு, லங்காவி மற்றும் ஜொகூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில துறைமுகங்கள் மட்டுமே இத்தகைய பெரிய கப்பல்களை கையாளும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.









