ஜொகூர் பாரு, ஜூலை 30 : கழிப்பறை குழியில், புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் 19 வயதுடைய கல்லூரி மாணவர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த அந்த குழந்தை, குளுவாங்,தாமான் செத்தியா முத்தியாராவில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
"அந்த மாணவி குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், தனது ஆசிரியரைத் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னரே அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில், அந்த மாணவி ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருப்பதையும், அவரின் வயிற்றில் மேலும் ஒரு பெண் குழந்தை இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்," என்று ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.
அதையடுத்து,குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் நேற்று மதியம் மணி 1 அளவில் அது குறித்த தகவலைப் பெற்றது என அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அங்கு ஒரு பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றார்.
முதற்கட்ட பரிசோதனையில், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடலில் பல குத்தப்பட்ட காயங்கள் இருப்பது தெரிய வந்தது.
இருப்பினும், குழந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
"அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் அந்தப் பெண்ணின் காதலர் என நம்பப்படும் 19 வயதுடைய கல்லூரி மாணவன் ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர்.






