ஷா ஆலம், ஜூலை 28 — ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காட்டு காளான்களைச் சாப்பிட்டு உணவு நச்சுத்தன்மைக்கு ஆளானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் காட்டு காளான்களைப் பறிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டாம் என பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் எச்சரித்துள்ளது.
பெர்சியாரான் சௌஜானா புச்சோங் (Persiaran Saujana Puchong) சாலை ஓரத்தில் பறிக்கப்பட்ட காட்டு காளான்களைச் சாப்பிட்ட பிறகே அந்த குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டதாக சுகாதார அலுவலகம் தெரிவித்தது.
உணவு நச்சுத்தன்மைக்கு ஆளான அந்த மூவர் Chlorophyllum molybdites என்ற வகை காட்டு காளான்களைச் சாப்பிட்ட ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்," என்று சுகாதார அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
"விஷக் காளான்கள் பார்ப்பதற்கு உண்ணக்கூடிய காளான் வகைகளைப் போலவே இருக்கலாம். மேலும், அவற்றை சமைப்பதன் மூலமோ அல்லது கொதிக்க வைப்பதன் மூலமோ அவற்றின் விஷத்தன்மை அழியாது.
எனவே பொதுமக்கள் காட்டு காளான்களைச் சாப்பிட்ட பிறகு ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காளான் நச்சுத்தன்மையின் பொதுவான அறிகுறிகளில் வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். அத்துடன் மாயத்தோற்றம் (Hallucinations), வலிப்பு, மனமகிழ்ச்சி மிதப்பு (Euphoria), குழப்பம், தசைப்பிடிப்பு மற்றும் கோமா போன்ற நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படலாம்.





