ஷா ஆலாம், ஜூலை 21 — நாட்டின் தலைமைத்துவம், மாநில அரசு மற்றும் ஒட்டுமொத்தப் பொதுச் சேவைத் துறையினருக்கு இடையே நிலவும் ஒற்றுமை உணர்வே, மக்களின் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்குமான திறனுள்ள, விரைந்து செயல்படும் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நிர்வாகத்திற்கு ஊக்கியாகத் தொடர்ந்து விளங்கும்.
மேன்மேலும் சவால்கள் நிறைந்ததாக உருவெடுத்து வரும் நிர்வாகச் சூழலில், பொதுச் சேவை முறையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதை உறுதி செய்ய இந்த ஒற்றுமை மிகவும் அவசியமானது என பொதுச் சேவை ஊழியர்களுடனான பிரதமர் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளரின் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஐந்தாவது முறையாக நடத்தப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் தலைவர்களுக்கும் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் இடையிலான உறவைப் பிணைக்கும் ஒரு முக்கியத் தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழும் அனைத்துப் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அரசாங்கத்தின் கொள்கைகளையும் தேசிய வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதில் பொதுச் சேவைத் துறையினர் காட்டிய அர்ப்பணிப்பு, ஊக்கம் மற்றும் உறுதியான ஆதரவின் காரணமாகவே மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட மிகவும் வலுவாக உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கையும் மக்களுக்குக் கண்கூடான நன்மைகளாக மாற வேண்டும் என்றால், பொதுச் சேவைத் துறையானது சுறுசுறுப்பான, விவேகமான, நேர்மை வழியிலான மற்றும் மக்கள் சார்ந்த வேலைக்கலாச்சாரத்தின் மூலம் தொடர்ந்து பலப்படுத்தப்பட வேண்டும்," என்று அமீருடின் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்காகத் தங்களின் பொறுப்புகளை அர்ப்பணிப்புடனும் தொழில்முறையுடனும் தொடர்ந்து ஆற்றி வரும் அனைத்துப் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் மந்திரி புசார் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.







