மியாமி,ஜூலை 21 : உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் தோல்வியைத் தொடர்ந்து, "தாங்க முடியாத வலி ; இந்த காயம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்" என்று லியோனல் மெஸ்ஸி உருக்கமான பதிவை இட்டிருக்கின்றார்.
உலக வெற்றியாளரான ஸ்பெயினிடம் கூடுதல் நேரத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தை அணிந்திருக்கும் புகைப்படத்துடன், மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பானிஷ் மொழியில், "அனைத்து நல்ல நினைவுகளையும் நான் எப்போதும் என் நெஞ்சில் வைத்திருப்பேன்" என்று எழுதியுள்ளார்.
"நாங்கள் சாதித்ததை இன்று பாராட்டுவது கடினம், ஆனால் இந்த அணி தொடர்ந்து இரு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தத் தொடரில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஆட்டத்தின்போது தோல்விக்குப்பிறகு கண்ணீர் விட்டு அழுத 39 வயதான மெஸ்ஸி மேலும் கூறினார்.
நாக் அவுட் சுற்றுகளில், அர்ஜென்டினா அணி ஆரம்பத்தில் பின்தங்கியிருந்தாலும், பின்னர் மீண்டு வந்து எகிப்து, இங்கிலாந்து அணிகளைத் தோற்கடித்தது.
மேலும் கேப் வெர்டே மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்த கூடுதல் நேரம் வரை விளையாட வேண்டியிருந்தது.
"எங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி நாங்கள் மீண்டெழுந்து வந்த போட்டிகள், எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும் போட்டிகள் . மேலும், ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவோடு, இந்த அணியின் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், எங்களை மீண்டும் ஒருமுறை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்ற வழிவகுத்தது," என்று இன்டர் மியாமியின் முன்கள வீரரான மெஸ்ஸி தனது பதிவில் எழுதியுள்ளார்.
இந்தத் தொடரில் எட்டு கோல்களை அடித்திருந்தாலும், உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி'ஓர் விருதை எட்டு முறை வென்ற மெஸ்ஸி, இறுதிப் போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
அவரைப் போலவே அவரது அணியும், மிகவும் சிறப்பாக திட்டமிட்டு விளையாடிய ஸ்பெய்ன் அணிக்கு எந்தவொரு சவாலையும் ஏற்படுத்த முடியவில்லை.
உலகக் கிண்ணத்தில் இதுவரை களமிறங்கிய மெஸ்சி 2014 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் இரு இறுதிப் போட்டிகளில் தோற்றுள்ளார்.
2022-இல் பிரான்சுக்கு எதிராக ஒரு முறை வென்றுள்ளார்.




