ரந்தாவ் பாஞ்சாங், ஜூலை 19: கிளந்தான் மாநில எல்லையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'ஓப் தாரிங் வாவாசான்' (Op Taring Wawasan) பாதுகாப்பு நடவடிக்கையின் போது, முறையான மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்களின்றி 350 கிலோகிராம் டுரியன் பழங்களை ஏற்றிச் சென்ற 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபே லி போஸ்மென் (Abe Li Posmen) என்ற சட்டவிரோதப் படகுத்துறைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொதுப் பாதுகாப்புப் படையின் (PGA) தென்கிழக்கு பிராந்திய கமாண்டர், எஸ்ஏசி அகமட் ராட்ஸி ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அந்தச் சோதனையின் போது, வாகனத்தின் பின்புறத்தில் 350 கிலோகிராம் டுரியன் பழங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், அந்தப் பழங்களைக் கொண்டு செல்வதற்கான முறையான சட்டப்பூர்வ ஆவணங்களையும் சமர்ப்பிக்க அந்த ஓட்டுநர் தவறியதைத் தொடர்ந்து, அவர் உடனடியாகப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பகட்ட விசாரணையில், தனது முதலாளி ஆர்டர் செய்திருந்த அந்தத் டுரியன் பழங்களை எல்லையோரப் பகுதியிலிருந்து பெற்றுக்கொண்டு, பாசீர் பூத்தே (Pasir Puteh) மாவட்டத்தில் உள்ள ஒரு விற்பனை மையத்திற்கு எடுத்துச் செல்ல மட்டுமே தாம் பணிக்கப்பட்டதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதப் படகுத்துறைக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் வைத்து சில நபர்கள் இப்பழங்களை தனது வாகனத்தில் ஏற்றியதாகவும் அவர் விவரித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட டுரியன் பழங்கள் மற்றும் நான்கு சக்கர இயக்கி வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 51,750 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காகக் கிளந்தான் மாநில விவசாயத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.







