ஷா ஆலம், ஜூலை 17: நேற்று சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள கம்பங் டேசா அமான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரு வீடுகளின் சமையலறை பகுதிகள் சேதமடைந்தன.
மாலை 6:09 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து சுங்கை பூலோ தீயணைப்பு-மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பணியாளர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சுமார் 16 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு சுமார் 15 x 30 சதுர அடி பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, இரு வீடுகளின் சமையலறை பகுதி பாதித்திருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்ததாக அஷ்ருல் ரிசால் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.








