சிப்பாங், ஜூலை 14 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-இல் பணியில் இருந்த அதிகாரி ஒருவர், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை 'திரெட்ஸ்' (Threads) சமூக ஊடகப் பக்கத்தில் வைரலான பதிவைத் தொடர்ந்து, ஏகேபிஎஸ் (AKPS) ``Integriti`` பிரிவு இந்த உடனடி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக கேஎல்ஐஏ நுழைவாயில் பிரிவு தளபதி முகமட் சாப்ரி சக்காரியா தெரிவித்தார்.
அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட வங்கித் கணக்கிற்கு கியூஆர் கோடு (QR Code) மூலம் 100 ரிங்கிட் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டோடு தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரி, விசாரணைக்கு உதவும் பொருட்டு வாக்குமூலம் அளிப்பதற்காக ஏகேபிஎஸ் கேஎல்ஐஏ உயர் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, '@brayenngabriel' என்ற அந்த திரெட்ஸ் கணக்கின் உரிமையாளரை ஏகேபிஎஸ் தொடர்புகொண்டதாகவும், ஆனால் நேற்று மாலை 4 மணி வரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என முகமட் சாப்ரி கூறினார்.
நேர்மைத் தன்மையை மீறும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரநிர்ணயச் செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மீறும் எந்தவொரு அதிகாரி அல்லது ஊழியருக்கும் எதிராக ஏகேபிஎஸ் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.
அதே வேளையில், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் பொதுமக்களிடம் இருந்தால், அவர்கள் விசாரணைக்கு உதவும் வகையில் தாராளமாக முன்வந்து தகவல்களை வழங்குமாறும் முகமட் சாப்ரி கேட்டுக்கொண்டார்.






