கோலா சிலாங்கூர், ஜூலை 11 : கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தப்பட்டு வரும் சிலாங்கூர் ஜாப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை (Karnival Jelajah JobCare Selangor) மூலமாக, 5,000 ரிங்கிட் வரை சம்பளம் கொண்ட நிபுணத்துவ பதவிகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று கோலா சிலாங்கூரில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்புச் சந்தையில், சேவை, சில்லறை வர்த்தகம் மற்றும் நிபுணத்துவத் துறைகளைச் சேர்ந்த 28 நிறுவனங்கள் பங்கேற்று 4,000 காலிப் பணியிடங்களை வழங்கியதாக, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பின் சம்பவ நிர்வாகி ஆரோன் டேவிட்ராஜ் தெரிவித்தார்.
“ இதில் 5,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளம் கொண்ட நிபுணத்துவத் துறைகளும் அடங்கும். இந்தக் காலிப் பணியிடங்கள் வேலை தேடுபவர்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் சுயவிவரங்களுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.
எனவே, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிறுவனங்களை அவர்களின் இடத்திற்கே நாங்கள் கொண்டு வருகிறோம் “
இன்றைய நேர்முகத் தேர்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, இந்த வேலை வாய்ப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 10,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் அடுத்தடுத்த வேலை வாய்ப்புச் சந்தைகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாம் நம்புவதாக சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (STDC) நடைபெற்ற சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையின் போது அவர் கூறினார்.
மாநில மக்கள் வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக, இந்த ஆண்டு கோலா லங்காட்டில் தொடங்கி ஒன்பது சிலாங்கூர் ஜாப்கேர் தொடர்களை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.








