ஷா ஆலம், மே 21: இங்குள்ள பத்து 14, கம்போங் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள லங்காட் ஆற்றில் (Sungai Langat) நேற்று குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் 3.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, பிற்பகல் 2 மணியளவில் பள்ளி மாணவன் தனது நண்பனுடன் குறிப்பிட்ட ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"லங்காட் ஆற்றில் தனது நண்பருடன் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் பலமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப் பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மாலை 4 மணியளவில் 14 வயதுடைய அச்சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர், இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காக மாணவனின் உடல் அம்பாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணம் என (SDR) வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக நாஸ்ரோன் மேலும் தெரிவித்தார்.
நண்பனுடன் ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
21 மே 2026, 4:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





