பழங்குடியினரும் வறுமையிலிருந்து விடுபட வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள உயர் கல்வி வேண்டும்

3 மே 2026, 8:33 AM
பழங்குடியினரும் வறுமையிலிருந்து விடுபட  வாழ்க்கை  தரத்தை மேம்படுத்திக் கொள்ள உயர் கல்வி  வேண்டும்

பழங்குடியின மக்கள் வறுமைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, தங்களின் சமூகப் பொருளாதாரத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உயர் கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மாநில அரசின் பழங்குடியினர் நல ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு, இளைய தலைமுறையினருக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்காக, மாநில அரசு தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) உட்பட பல்வேறு தளங்களை ஏற்படுத்தித் தந்துள்ளதாகக் கூறினார்.

"உதாரணத்திற்கு, சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையத்தில் (STDC) ட்ரோன் தொழில்நுட்ப நிபுணத்துவம் உட்பட பல்வேறு திறன் சார்ந்த துறைகளில் இலவசக் கல்வி மற்றும் தங்கும் விடுதி வசதிகளை வழங்குகிறோம்.

"எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான வாழ்வு
க்கும் இந்தத் துறைகள் பெரிதும் உதவும் என்பதை உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இன்று, மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறந்து விளங்கிய பழங்குடியின மாணவர்களுக்கான அங்கீகார நிகழ்வில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், கோல லங்காட், சிப்பாங், உலு லங்காட், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 சிறந்த பழங்குடியின மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டன.

கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலனளிப்பதை நிரூபிக்கும் வகையில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாப்பாராயுடு குறிப்பிட்டார்.

அதே வேளையில், மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் யாரும் கல்வியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை கிராமத் தலைவர்கள் (Tok Batin) உறுதி செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டினார்.

"சிலாங்கூரில் சுமார் 22,000 பழங்குடியின மக்கள் உள்ளனர். மாநில அரசு வழங்கும் உதவிகள் உட்பட அனைத்து வகையிலும் இந்த சமூகம் மேம்பாடு அடைவதை கிராமத் தலைவர்கள் உறுதி செய்வது அவசியம்.

"பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அவர்களுக்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிராமத் தலைவர்கள் தத்தம் கிராமங்களின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.