இஸ்தான்புல், ஏப்ரல் 16 - ஈரானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது மிகவும் மேம்பட்ட மற்றும் விலை உயர்ந்த உளவு ட்ரோன்களில் ஒன்றான MQ-4C டிரிட்டனை பாரசீக வளைகுடாவில் இழந்துள்ளது.
இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 200 மில்லியன் முதல் 240 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டு லாக்ஹீட் மார்ட்டின் F-35 போர் விமானங்களின் விலையை விட இரு மடங்காகும். மேம்படுத்தப்பட்ட ஒரு F-35 விமானத்தின் விலை கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, ‘கோட் 7700’ என்ற அவசர சமிக்ஞையை அனுப்பிய பிறகு MQ-4C ட்ரோன் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு சம்பவச் சுருக்கத்தில், அமெரிக்க கடற்படைத் தலைமையகம் MQ-4C ட்ரோன் ஒன்றை இழந்ததை உறுதிப்படுத்தியது.
அந்த அறிக்கையின்படி, உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய இந்த ஆளில்லா விமானம் (HALE) பாரசீக வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்கப் போர்த் துறையால் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டின் கீழ், 2.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சேதத்தை உள்ளடக்கிய எந்தவொரு சம்பவமும் ‘வகுப்பு A’ சம்பவமாக வகைப்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 9ஆம் தேதி, ஈரானிய வான் பாதுகாப்புப் படையினரால் MQ-4C ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், அந்த ட்ரோன் உண்மையில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் செவ்வாயன்று தெரிவித்தது.
இந்த சம்பவச் சுருக்கம், விபத்துக்கான காரணத்தை விவரிக்கவில்லை. அந்த ட்ரோன் "விழுந்து நொறுங்கியது" என்றும், "இதில் தங்களது வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது.








