ஷா ஆலம், ஏப்ரல் 6 – இங்குள்ள செக்சன் 25, ஸ்ரீ லெம்பாயுங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) பேரிடர் கால நிதியுதவிகளை வழங்கித் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தத் தீ விபத்து அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது புலோக்கில் உள்ள முதல் மாடி வீட்டில் நிகழ்ந்தது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த வீட்டின் உரிமையாளர் சுல்கிப்லி பஹ்ரி என்பவருக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஷா ஆலம் மாநகராட்சியின் மண்டலம் 9-க்கான கவுன்சிலர் ராமு நடராஜன், மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், அக்குடும்பத்தின் அன்றாடச் சுமையைக் குறைக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் வழங்கப்பட்டன. இந்த நிவாரணங்களை கவுன்சிலர் ராமு வழங்கிய வேளையில், மாநகராட்சி சமூக மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் அஃபண்டி யாசிஸ் உடனிருந்தார்.
இந்த இக்கட்டான சூழலில் வழங்கப்பட்ட உதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாரத்தைக் குறைப்பதுடன், அவர்களுக்குத் தேவையான மன உறுதியையும் வழங்கும் என நம்புவதாக ஷா ஆலம் மாநகராட்சி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.








