ரியாட், மார்ச் 29 - ஒரு மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்து, 159 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளதாக சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 2021-இல் தொடங்கப்பட்ட சவுதி பசுமை முன்னெடுப்பின் (SGI) கீழ் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சவுதி செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சர் அப்துல்ரஹ்மான் அப்துல்மொஹ்சென் அல்ஃபாட்லி கூறுகையில், ஆரம்பத்தில் 18,000 ஹெக்டேராக இருந்த மீட்கப்பட்ட நிலப்பரப்பு, 2024-ஆம் ஆண்டுக்குள் 250,000 ஹெக்டேராக அதிகரித்து, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மில்லியன் ஹெக்டேர் என்ற இலக்கை எட்டியுள்ளது என்றார்.
அணை நீர் பயன்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உத்திப்பூர்வ திட்டங்களின் ஆதரவுடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் ஹெக்டேர் என்ற இலக்கை அடைவதற்கு இந்த முன்னேற்றம் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு தழுவிய அளவில் 40 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதற்குச் சமமான 10 பில்லியன் மரங்களை நடுவதை இந்த சவுதி பசுமை முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCCD) நிர்வாகச் செயலாளர் யாஸ்மின் ஃபுவாட் இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ளார். "மிகவும் சவாலான சூழலில்கூட நில மீட்பு சாத்தியம் என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது," என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கு பசுமை முன்னெடுப்பு மற்றும் UNCCD COP16 மாநாட்டை நடத்துவது போன்ற முயற்சிகள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பையும் ஃபுவாட் பாராட்டினார்.





