கோலாலம்பூர், மார்ச் 26 - அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைப் பாகிஸ்தான் நடத்த முன்வந்துள்ளதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார். அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த முயற்சி சரியானதும் ஆக்கப்பூர்வமானதுமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று தனது முகநூல் காணொளியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஓமான் போன்ற பிற நாட்டுத் தலைவர்களின் இராஜதந்திர முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
"தொடர்புடைய தரப்பினருடனான பாகிஸ்தானின் நல்லுறவும், இஸ்லாமிய உலகில் ஒரு நம்பகமான குரலாக அதன் நிலைப்பாடும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை உருவாக்க உதவும் வலுவான நிலையில் அந்நாட்டை வைத்துள்ளது," என்று அவர் கூறினார்.
இந்த முயற்சிக்கு மலேசியா தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, அமெரிக்காவும் ஈரானும் இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எந்தவொரு பேச்சுவார்த்தையும் உண்மையான நோக்கத்துடன், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான அர்ப்பணிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும், தந்திரோபாய நலன்களுக்காக மோதலைக் கட்டுப்படுத்துவதாக மட்டும் அது இருக்கக்கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
"சர்வதேச சமூகம் பல தற்காலிகப் போர்நிறுத்தங்களைக் கண்டுள்ளது; அவை தீர்வுகளாக அமையாமல், வெறும் இடைநிறுத்தங்களாகவே செயல்பட்டன. இந்த வட்டாரத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு தேவை," என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ், குறிப்பாக இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ளும்போது, தனது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள ஈரானுக்குள்ள உரிமையை மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது என்றாலும், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
அண்டை நாடுகளின், குறிப்பாக வளைகுடா நாடுகளின் மக்களும் உள்கட்டமைப்புகளும் அவர்கள் விரும்பாத ஒரு மோதலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டங்கள் பாரபட்சமாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தினார். சர்வதேசச் சட்டங்கள் ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்தப்படக்கூடாது.
"சர்வதேச சட்டம் ஒரு தரப்பினரைப் பொறுப்புக்கூறலிலிருந்து பாதுகாத்து, மற்றொரு தரப்பினரின் தற்காப்பு உரிமையை மறுப்பதாக இருக்கக்கூடாது. அதன் நம்பகத்தன்மை நிலைத்தன்மையிலேயே தங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
சூழலை நன்கு புரிந்துகொண்டு, பதட்டங்களைத் தணிக்க ஒரு தீர்வைக் காணும் நோக்கில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக அன்வார் தெரிவித்தார்.
"நீதி மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய ஒவ்வொரு நேர்மையான முயற்சிக்கும் மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும்," என்று அவர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைப் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளதை பிரதமர் வரவேற்றார்
26 மார்ச் 2026, 10:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஈரான் - மலேசியா வெளியுறவு அமைச்சர்கள் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை
Shalini Rajamogun
25 மார்ச் 2026

antarabangsa
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்முயற்சி
Shalini Rajamogun
25 மார்ச் 2026

antarabangsa
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 350-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காகக் காத்திருப்பு
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
லெபனானையும் உள்ளடக்கி போர்நிறுத்தம் விரிவுபடுத்தப்பட வேண்டும் - பிரதமர்
Shalini Rajamogun
26 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




