கோலாலம்பூர்: இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கான தடை மார்ச் 19, 20 மற்றும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும்.
மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்து அபாயத்தைக் குறைக்கவும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணத்தை வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை இந்தத் தடை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு (MOT) தெரிவித்துள்ளது.
"இந்தத் தடையை அமல்படுத்தும் போது, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் முக்கிய செயல் பாடுகளின் தேவைகளும் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளன," என்று அமைச்சு இன்று தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. "பொது மக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அனைவரின் பாதுகாப்பிற்காகவும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
இருப்பினும், சில கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்கலன் மற்றும் சரக்கு லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், கட்டுமானப் பணிகளுக்கான வாகனங்கள் 25 கிலோமீட்டர் சுற்றளவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இயங்கலாம்.
அவசரகாலப் பணிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களிலிருந்து சரக்குகளைக் கொண்டு செல்லுதல், அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் போன்ற முக்கிய சேவைகளுக்கு இந்தத் தடையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"நாட்டின் முக்கிய செயல்பாடுகளைப் பாதிக்காமல், பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதில் போக்குவரத்து அமைச்சின் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை காட்டுகிறது," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா
போக்குவரத்து கட்டுப்பாடு: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கனரக வாகனங்களுக்குத் தடை - சாலைப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு
19 மார்ச் 2026, 6:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





