ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தகப் பாதையில் நிலவும் பதட்டத்தின் தாக்கத்தை தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) தொடர்ந்து கண்காணித்து வருகிறது

18 மார்ச் 2026, 7:05 AM
ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தகப் பாதையில் நிலவும் பதட்டத்தின் தாக்கத்தை தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) தொடர்ந்து கண்காணித்து வருகிறது

நாட்டின் நீர் சேவைத் துறையின் செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தகப் பாதையில் நிலவும் பதட்டத்தின் தாக்கத்தை தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதுவரை, எரிபொருள் விலை நிலையாக இருப்பதாலும், உதிரி பாகங்கள் மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாததாலும், இத்துறை மீதான நேரடித் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பான் தெரிவித்துள்ளது.

"இந்த மோதல் நீடித்தால், துறைக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நேரடித் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஸ்பான் அவ்வப்போது பாதிப்பு மதிப்பீடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். செயல் பாட்டுச் செலவுகளில் ஏற்படும் எந்த ஒரு திடீர் உயர்வும் நீர் சேவை வழங்குநர்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும்," என்று அது இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

ஸ்பானின் கூற்றுப்படி, இந்த தொடர் கண்காணிப்பில் செயல் பாட்டுச் செலவுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் நுகர்வோருக்குத் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் சேவை வழங்குநர்களின் திறன் ஆகியவை குறித்த மதிப்பீடுகளும் அடங்கும்.

"சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் தளவாடங்களுக்கான எரிபொருள், ஆலைகள் மற்றும் குழாய் அமைப்புகளில் பயன்படுத்தப் படும் உபகரணங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் என இரண்டு முக்கிய அனைத்துலக சந்தை சார்ந்த கூறுகளை நீர் சேவைத் துறை சார்ந்துள்ளது."

"தேவைப் பட்டால், நுகர்வோர் மீதான தாக்கத்தைக் குறைக்கவும், இத்துறை தொடர்ந்து சேவையாற்றுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சிடம் (பெட்ரா) பரிந்துரைக்கப் படும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அதே வேளையில், தணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும், குறிப்பாக மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குத் தேவையான இரசாயனப் பொருட்கள், இயந்திர மற்றும் மின்சார உதிரி பாகங்களின் கையிருப்பை உறுதி செய்யுமாறும் நீர் சேவை வழங்குநர்களை ஸ்பான் வலியுறுத்தியுள்ளது.

"பண்டிகைக் காலங்களிலும், உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதும் நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோரை ஸ்பான் கேட்டுக்கொள்கிறது. முறையான பயன்பாடு அனைவருக்கும் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதோடு, தற்போதைய நெருக்கடியின் பாதகமான விளைவுகளிலிருந்து விநியோகஸ்தர்களின் செயல்பாட்டுச் செலவுகளையும் கட்டுப்படுத்த உதவும்."

"எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், உங்கள் பகுதி நீர் சேவை வழங்குநருக்கோ அல்லது 
sismas.span.gov.my என்ற இணைய முகவரியில் உள்ள SiSMAS செயலி மூலமாகவோ ஸ்பானுக்கோ புகாரளிக்கவும்," என்று அது மேலும் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.