ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு உள்நாட்டு விமானச் சேவைகள் அதிகரிப்பு - அந்தோணி லோக்

16 மார்ச் 2026, 9:54 AM
ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு உள்நாட்டு விமானச் சேவைகள் அதிகரிப்பு - அந்தோணி லோக்

புத்ராஜெயா, மார்ச் 16 - எதிர்வரும் ஹரிராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகப்படியான தேவையைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு விமானச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்தவொரு உள்நாட்டு விமானச் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்றும், ஒருவேளை ரத்து செய்யப்பட்டிருந்தால் அவை பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள சர்வதேச வழித்தடங்களாக மட்டுமே இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில் இந்தச் சூழல் மலேசியாவிற்கு ஒரு புதிய வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, லண்டன் மற்றும் பாரிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் தற்போது மலேசியா ஏர்லைன்ஸ் போன்ற நேரடிச் சேவைகளை அதிகம் விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ஐரோப்பிய வழித்தடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளைக் குறைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அந்தோணி லோக் கூறினார். விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும், ஏனெனில் அத்தகைய ரத்து நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகத் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்துடன் (MTEN) இன்று மாலை ஒரு முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு உதவிகள் மற்றும் செலவினங்களைக் குறைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.