கூலிம்: உலக ஊடகங்களையும், உள்ளூர் அரசியலையும் சீர்குலைக்கும் நோக்கில் பெரும் செல்வந்தர்கள் சிலர் சதி செய்வதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலும் இதுபோன்ற சதி முயற்சிகளும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் மக்கள் நம்பிக்கைக்கும் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கை எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, மாறாக செல்வமும் அதிகாரமும் கொண்ட அனைவருக்கும் பொருந்தும் என அன்வார் தெளிவுபடுத்தினார்.
"மலேசியா ஊழலை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும். கடந்த கால தவறுகளை நாம் மீண்டும் செய்யக்கூடாது," என்று கெடா, கூலிமில் நடைபெற்ற இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பேசியபோது அவர் வலியுறுத்தினார்.
பெரும் செல்வந்தர்களின் செல்வாக்கு கட்டுக்கடங்காமல் போனால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கும், முக்கிய நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதையே பிரதமரின் இந்த எச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது.




