பினாங்கு, மார்ச் 6: பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கோயில் விவகாரத்தில், எந்தவொரு தரப்பினரும் தன்னிச்சையாகச் செயல்படவோ, சட்டத்தைக் கையில் எடுக்கவோ வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது பதற்றத்தை உருவாக்கும் எந்தவொரு செயலையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது," என நேற்று தலைநகரில் நடைபெற்ற கெசுமா பெர்கேசோ லிண்டுங் (Kesuma Perkeso Lindung) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இப்பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாகக் கருத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாறாக, சட்ட விதிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் இணங்க இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








