கோலாலம்பூர், மார்ச் 3- ஹரிராயா பெருநாளை முன்னிட்டு ஷா ஆலம் மாநகர சபை (MBSA) பொதுமக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு 65 விழுக்காடு வரையிலான அதிரடி கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்புச் சலுகையானது மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று அந்த உள்ளூராட்சி மன்றம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எம்.பி.எஸ்.ஏ சாலை போக்குவரத்து ஆணை 2007-இன் கீழ் விதிக்கப்பட்ட வாகன நிறுத்துமிட அபராதங்களுக்கு 20 ரிங்கிட் எனும் சிறப்பு விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் அபராதங்களைச் செலுத்த ஷா ஆலம் சேவை மையம் அல்லது விஸ்மா எம்.பி.எஸ்.ஏ-வில் உள்ள வாகனத்தில் இருந்தவாறே செலுத்தும் கவுண்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், சுங்கை பூலோ, கோத்தா கெமுனிங் மற்றும் செத்தியா ஆலாம் ஆகிய பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களிலும் இந்த அபராதத் தொகையைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகச் செல்ல முடியாதவர்கள் ஜோம்பெ (Biller Code 6726), MyMBSA செயலி அல்லது ஃப்ளெக்ஸி பார்க்கிங் போன்ற மின்னியல் தளங்கள் வழியாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
மேபேங்க்2யூ மற்றும் பேங்க் முவாமாலாட் கவுண்டர்கள் மூலமாகவும் வாகன நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்தும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் 03-5510 5133 எனும் எண்ணில் மாநகர சபையின் வருவாய் மேலாண்மைப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.








