ஷா ஆலம், பிப் 27: ஜெரம், தம்பாக் ஜாவா தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஒரு பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை மதியம் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் உருக்குலைந்தது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 7-வது மண்டலதலைவர் சாம்சூல் மாரிப் சைபானி கூறுகையில், மதியம் 1.34 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அடுத்த 23 நிமிடங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தத் தீயணைப்புப் பணியில் கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, தஞ்சோங் காராங், வடக்கு கிள்ளான், சபாக் பெர்னாம் மற்றும் சுங்கை பெசார் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 21 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 200x100 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தத் தொழிற்சாலைக் கட்டிடம் 80 சதவீதம் தீயினால் சேதமடைந்துள்ளதை மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
மாலை நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதியில் 50 சதவீதத் தீயை அணைப்பதில் வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய பகுதிகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த 700 அடி நீளமுள்ள இரண்டு குழாய்கள் மற்றும் நான்கு தண்ணீர் பீய்ச்சும் கருவிகள் மூலம் திறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுவரை இந்த விபத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








