ஷா ஆலம், 23 பிப்: நேற்று மாலை பண்டார் பாரு சுங்கை பூலோ, ஜாலான் 2/2-இல் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகின.
இது குறித்து மாலை 3.47 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தெரிவித்தது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதில் மூன்று வீடுகள் சுமார் 98 விழுக்காடு வரை சேதமடைந்த வேளையில், அருகில் இருந்த மற்றொரு வீடு 5 விழுக்காட்டிற்கும் குறைவான பாதிப்புக்கு உள்ளானது என்று அதன் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் முன் மற்றும் பின் பகுதிகளில் நான்கு முனைகள் கொண்ட நீர் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய டமன்சாரா, ரவாங் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து இயந்திர உதவிகளும்பெறப்பட்டது.
மூத்த தீயணைப்பு அதிகாரி ரோஸ்டி ஹைனான் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், கண்காணிப்பு அதிகாரியான அப்துல் ரஹ்மான் சே பா மூத்த நடவடிக்கை தளபதியாகச் செயல்பட்டார்.
தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதையும், எவ்வித ஆபத்தும் இல்லை என்பதையும் உறுதி செய்ய விரிவான சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயங்களோ அல்லது உயிர் இழப்புகளோ ஏற்படவில்லை என்றாலும், மொத்தம் 15 குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 7.25 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடையப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் வாகனங்களும் நிலையத்திற்குத் திரும்பின. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எப்போதும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.







