புத்ராஜெயா, பிப் 24 - ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19 வரையிலான காலகட்டத்தில், குடிநுழைவுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,043 சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) தடுத்து வைத்துள்ளது.
குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடு) டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், இந்தக் காலகட்டத்தில் இந்தோனேசியா, மியன்மார், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவு நாடு தழுவிய அளவில் 1,855 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் மொத்தம் 30,177 நபர்கள் சோதனையிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"குடிநுழைவுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினருக்கு எதிராக கடுமையான, விரிவான மற்றும் கவனம் செலுத்தப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் குடிநுழைவுச் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த குடிநுழைவுத் துறை தொடர்ந்து உறுதியுடன் உள்ளது," என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் செய்யப்பட்ட குற்றமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, செல்லுபடியாகும் அனுமதி அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக 4,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக பிரிவு 15(1)(c)-இன் கீழ் 1,250 வழக்குகளும், அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் விதி 39(b)-இன் கீழ் 806 வழக்குகளும், இதர குற்றங்களுக்காக 183 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.







