ஷா ஆலம், பிப் 20 - புதிய ஷா ஆலம் மேயராக நியமிக்கப்பட்ட டத்தோ ஸாபிடா சஃபார், ஷா ஆலம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சேவை வழங்கலை வலுப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்.
ஷா ஆலம் மாநகராட்சி ஒரு முதிர்ந்த ஊராட்சி அமைப்பாகும்; இதன் சாதனைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இதற்குச் சான்று என அவர் கூறினார்.
“குப்பை மேலாண்மை, வெள்ளப் பிரச்சனைகள் மற்றும் சாலை நிலைமை போன்றவை மற்ற ஊராட்சி அமைப்புகளும் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல்கள் ஆகும். இவை நேரடியாகக் குடியிருப்பாளர்களைப் பாதிக்கின்றன; ஆகவே இவைகளில் கவனம் செலுத்துவேன் என்றார்.
“முதலில் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும்,” என்று விஸ்மா எம்பிஎஸ்ஏவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
58 வயதான டத்தோ ஸாபிடா சஃபார், டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் அவர்களைத் தொடர்ந்து மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷா ஆலமில் மேயர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார்.
டத்தோ ஸாபிடா மலாயாப் பல்கலைக்கழகத்தில் (Universiti Malaya) பொது சேவை துறையில் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் 1995ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராக அரசுப் பணியில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
அதன் பின்னர், உலு லங்காட் மாவட்டம் மற்றும் நில அலுவலகம், சிலாங்கூர் மாநில கருவூலம் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MITI) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இந்த நியமனம் பெறுவதற்கு முன்பு, அவர் பினாங்கு மாநில நிதி அதிகாரியாக இருந்துள்ளார்.


