ஆலோர் ஸ்டார், பிப் 16: கோலா நெருாங்கிற்கு அருகிலுள்ள கம்பங் பெரிக்கில் உள்ள மீன் குளத்தில் விழுந்த நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட அய்யாஷ் அகமது சாஜித் அகமது என்ற அந்தச் சிறுவன் ஜித்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று பாடாங் தெராப் மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி அஃப்சானிஷாம் முகமது ஷாம் தெரிவித்தார்.
சிறுவனின் பெற்றோர் அளித்த தகவலின்படி, தங்களது மகன் வீட்டின் அருகிலுள்ள மீன் குளப் பகுதியில் மணல் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு அவனைக் காணவில்லை என்றும் தெரிவித்தனர். தேடுதலின் போது, சிறுவனின் காலணிகள் மீன் குளத்தில் மிதப்பதைக் கண்டனர். பின்னர், குளத்தில் விழுந்து சுயநினைவற்ற நிலையில் இருந்த சிறுவனை அவர்கள் மீட்டனர்.
மருத்துவமனையில் சிறுவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இரவு 11 மணியளவில் அவன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. சுல்தானா பாஹியா மருத்துவமனையின் (HSB) தடயவியல் துறையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிறுவன் நீரில் மூழ்கியதாலேயே உயிரிழந்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


