ஷா ஆலம், பிப் 12 - ஷா ஆலம் மாநகர மன்றம் (MBSA) ஏற்பாட்டில் ரமலான் சந்தைகளில் நடத்தப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டும் தொடரும் என்று ஷா ஆலம் மேயர், டத்தோ முகமது ஃபவுசி முகமது யாத்திம் கூறினார்.
பிப்ரவரி 23 முதல் மார்ச் 13 வரை நடைபெறும் 'மைசேவ் ஃபுட்' திட்டத்தில் பிரிவு 13, பிரிவு 17, பிரிவு 19, பிரிவு 28 மற்றும் பிரிவு U16 ஆகிய ஐந்து இடங்களில் உள்ள ரமலான் சந்தைகள் இடம்பெறும் என்றார் அவர்.
"இத்திட்டத்தின் மூலம், வியாபாரிகள் விற்கப்படாத, ஆனால் இன்னும் நல்ல நிலையில், உண்ணக்கூடிய உணவு மற்றும் பானங்களை, வழங்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் உள்ள MBSA ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
"தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சுராவு, மசூதி, குறைந்த கட்டண அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் விடுதிகளில் விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, அந்த உணவுகள் பதிவு செய்யப்பட்டு, எடைபோடப்பட்டு, லேபிளிடப்படும்," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த 616 தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பையும் MBSA வரவேற்கிறது.


