ஷா ஆலாம், பிப். 9: சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு சீனப் புத்தாண்டுக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை இங்குள்ள ஸ்ரீ தெர்னாக் பேரங்காடியில் வழங்கினார்.
வரவிருக்கும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் பயனாளிகளின் சுமையைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கியப் பண்டிகைகளை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு பயனாளியும் 200 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டைப் பெறுவதாகவும் அமிருடின் கூறினார்.
"சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த உதவியைப் பெற அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
"இந்த பங்களிப்பு, பயனாளிகளின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத் தயாரிப்புகளுக்கு மகிழ்ச்சியைச் சேர்த்து, அவர்களின் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
3,000 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதற்காக, ஒரு நபருக்கு 200 ரிங்கிட் மதிப்புள்ள இந்தப் பண்டிகைக்கால ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு, மாநில அரசாங்கம் இத்திட்டத்திற்காக 18.48 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகும். இதன் மூலம் நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்குத் தயாராகும் 92,400 பயனாளிகள் பயனடைவார்கள்.


