கோலாலம்பூர், பிப் 9- சமநிலையான மற்றும் பிரதிநிதித்துவ அனைத்துலக ஒழுங்கை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய சாதனையாக பிரிக்ஸ் அமைப்பில் தங்களின் பங்களிப்பிற்கான பரஸ்பர ஆதரவை மலேசியாவும் இந்தியாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வருகையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், 2026-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியாவின் தலைமையை மலேசியா வரவேற்பதாக இரு நாடுகளும் தெரிவித்தன.
அதேவேளையில், பிரிக்ஸ் நட்பு நாடாக மலேசியாவின் பங்களிப்பிற்கு இந்தியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராகும் மலேசியாவின் ஆர்வத்தையும் கவனத்தில் கொண்டுள்ளது.
"இந்த ஒத்துழைப்பை மிகவும் சமநிலையான மற்றும் பிரதிநிதித்துவ அனைத்துலக ஒழுங்கை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய சாதனையாக இரு தலைவர்களும் அங்கீகரிக்கின்றனர்.
"நியாயமான உலகளாவிய நிர்வாகத்திற்கும் நிலையான வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க நாடுகளுக்கு இது ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது என்ற கருத்தையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்," என்று அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் மோடியும் புத்ராஜெயாவில் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்தச் சந்திப்பு மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அனைத்துலக நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டதாக அந்தக் கூட்டறிக்கை மேலும் தெரிவித்தது.
ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (UNSC) உட்பட அனைத்துலக அமைப்புகளை தற்போதைய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேலும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.


