வாஷிங்டன், பிப் 3- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை (Tariffs) 18 விழுக்காடாகக் குறைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தகவலை அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது முயற்சியில், இந்தியாவின் இந்த முடிவு பெரும் உதவியாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக அளவிலான எரிசக்திப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த வரிச்லுகைக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகள் மற்றும் இதர வர்த்தகத் தடைகளை 'பூஜ்ஜியம்' (Zero) என்ற நிலைக்குக் குறைக்கப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.


