தாப்பா, ஜன 30 — இந்த ஆண்டில் ஹியூமன் பேபிலோமாவைரஸ் (HPV) DNA பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையைச் செயல்படுத்த தேசிய மக்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்திற்குப் (LPPKN) பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) 5.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் 32,000 பெண்களைச் சோதனை செய்வதோடு முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என LPPKN தலைவர் டத்தோ ஶ்ரீ ரோஹானி அப்துல் கரீம் கூறினார்.
“பெண்கள் சிரமம் மற்றும் பயத்தை எதிர்கொண்டு, HPV DNA பரிசோதனையை தாமதப்படாமல் செய்ய வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறியப்படுதல், குணமடையும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க ஓராங் அஸ்லி உட்பட பல்வேறு சமூகங்களிலிருந்து இன தூதர்களை LPPKN நியமித்துள்ளதாக ஶ்ரீ ரோஹானி மேலும் கூறினார்.
“இந்த தூதர்களுக்கு பரிசோதனை நடைமுறைகள் மற்றும் மாதிரி சேகரிப்பு குறித்த விரிவான தகவல்களுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் சீன, இந்திய மற்றும் ஓராங் அஸ்லி சமூகங்கள் உட்பட அனைத்து இன மக்களுக்கும் எளிதாக செயல்முறையை தெளிவாக விளக்க முடியும்,” என்று ரோஹானி கூறினார்.
இதற்கிடையில், 2019 முதல் கடந்த ஆண்டு வரை 198,001 பெண்கள் HPV DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதில் 15,315 பேருக்கு நேர்மறையான முடிகள் வந்தன.
“அந்த எண்ணிக்கையில், 210 பெண்கள் புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 24 பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.


