கோலாலம்பூர், ஜன 28 - இந்த ஆண்டு இந்திய தொழில்முனைவோர் நிதித் திட்டத்திற்கான (ஸ்பூமி) ஒதுக்கீட்டை RM30 மில்லியனில் இருந்து RM50 மில்லியனாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு அதிகரித்ததன் வழி இந்த கடனுதவி திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
ஸ்பூமி நிதி அதிகரிக்கப்பட்டிருப்பது இந்திய சமூகத்தில் தொழில்முனைவோரின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
"ஜனவரி மாத இறுதிக்குள் ஸ்பூமி 136 இந்திய தொழில்முனைவோருக்கு குறைந்தது 41 லட்சம் ரிங்கிட்டை விநியோகித்துள்ளது", என நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
இதனிடையே பிப்ரவரி முதலாம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2026ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு KUSKOP MADANI திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உதவுவதற்காகப் பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் 200 Wira KUSKOP தன்னார்வலர்களைத் தங்கள் தரப்பு பணிக்கு அமர்த்தவிருப்பதாகச் சிம் குறிப்பிட்டார்.
"தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சில் இருந்து அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். எனவே, மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடனுதவிகள் பெறுவது, ஆவணங்களைச் சமர்பிப்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த கூடாரத்திற்குச் செல்லலாம்," என்றார் அவர்.
பெர்னாமா


