கோலாலம்பூர், 14 ஜனவரி- உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் 'குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0' (Global Sumud Flotilla 2.0) எனும் மனிதாபிமானப் பணியில் மடாணி அரசாங்கம் நேரடியாக ஈடுபடும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் அரசாங்கம் நேரடியாக பங்கேற்பது என்பது எல்லைகள், இனம் அல்லது மதங்களைக் கடந்து, நீதியையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதில் தைரியம் தேவைப்படும் ஒரு சர்வதேச போராட்டத்தின் தொடர்ச்சியாகும் என்று அவர் கூறினார்.
"பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கு உதவவும் அவர்களைப் பாதுகாக்கவும் எங்களின் முயற்சிகளைத் திரட்டுவோம். கண்ணியமான மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனத்தைப் பெறுவதில் இனி நீதியைத் தள்ளிப் போட முடியாது," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, புத்ரா ஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் சுமூத் நுசந்தாரா கட்டளை மையத்தின் (SNCC) தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி மற்றும் சுமூத் நுசந்தாரா நிறுவனர் நாதிர் அல்-நூரி ஆகியோரின் மரியாதை நிமித்தமான சந்திப்பை அன்வார் ஏற்றுக்கொண்டார்.
நீடித்த உதவித் தடையாலும், தொடரும் போர் நிச்சயமற்ற தன்மையாலும், பாலஸ்தீனியர்களின் தொடர்ச்சியான துயரங்களாலும் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து தமக்கு விளக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, உலகளாவிய மௌனத்தை உடைத்து சர்வதேச அரங்கில் காசாவின் குரலை வெற்றிகரமாக எதிரொலித்த சுமூத் நுசந்தாரா பணியின் சாதனைகளை சானியும் நாதிரும் பகிர்ந்து கொண்டனர்.


