சபரிமலை, ஜன 14 – கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் உச்சகட்ட நிகழ்வான 'மகர ஜோதி' தரிசனம் இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 3:08 மணிக்கு சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் வேளையில் நடைபெறும் 'மகர சங்கரம பூஜை'யுடன் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து, பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் ஐயப்பனின் புனித திருவாபரணங்கள் மாலை 6:15 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடையும்.
பின்னர், சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலை 6:30 மணியளவில் மகா தீபாராதனை காட்டப்படும் வேளையில், பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெய்வீக மகர ஜோதி பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.
இந்த புனித நிகழ்வைக் காண மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷத்துடன் சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் குவிந்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
சுமார் 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் வாகன போக்குவரத்திற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சுமார் 35,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து, வரும் ஜனவரி 20-ஆம் தேதி பந்தள ராஜ குடும்பத்தினரின் தரிசனத்துடன் சபரிமலை நடை முறைப்படி அடைக்கப்படும்.


