கோலாலம்பூர், டிச 29- நாட்டின் சர்ச்சைக்குரிய 1 எம்டிபி ஊழல் மீண்டும் நிகழாமல் இருக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மற்றும் காவல்துறையில் சீர்த்திருத்தம் அவசியம்.
இந்த வலியுறுத்தலை நாட்டின் இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ முன்வைத்தார்.
1 எம்டிபி போன்ற ஊழல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். ஆக போலிஸ் படையிலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திலும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம், நாட்டின் முதலீட்டு நிறுவனத்தின் நிதியில் 2.3 பில்லியன் ரிங்கிட் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 1 எம்டிபி வழக்கின் தீர்ப்பு குறித்து ஜசெக தலைவருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. அதில் சட்டத் துறை தலைவர், அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆனால் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். அமலாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களைக் கோருவதும் இப்போது அவசரத் தேவையாக உள்ளது.
இதுவே உண்மையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று டாமான்சாரா எம்.பியு,மான கோபிந்த் சிங் டியோ கூறினார்.


