ஆஸ்திரேலியா, டிச 10 - டிக் டோக், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப், ஸ்நேப் சாட் போன்ற சமூக ஊடகங்களை 16 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த தடை இவ்வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வயது குறைந்த புதியப் பயனர் கணக்குகளைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ள கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்ய தவறினால், அதிகபட்சம் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும்.
உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா தேசிய அளவிலான இந்த தடையை அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெற்றோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இந்த தடையை பெரிதும் வரவேற்றுள்ள நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும், இந்த நடவடிக்கை அதிகக் கட்டுப்பாடானது என்பதோடு நடைமுறையில் அமுல்படுத்த சிரமமானது என்றும் விமர்சிக்கின்றன.
இணையப் பகடிவதை, பாலியல் தொந்தரவுகள் மற்றும் மனநல பாதிப்புகள் போன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளையும் பதின்ம வயது சிறார்களையும் பாதுகாப்பதே இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தடையை அமுல்படுத்திய முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழும் நிலையில் மேலும் பல நாடுகள் இதைப் பின்பற்ற பரிசீலித்து வருகின்றன, அதில் குறிப்பாக மலேசியா அடுத்தாண்டு இத்தடையை அமுல்படுத்துகிறது.


