கோலா சிலாங்கூர், டிசம்பர் 9 — சிலாங்கூரின் மனிதவள முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில், “Selangor Career Launchpad – 2025” எனும் தொழில் வளர்ச்சி பயிலரங்கு இன்று STDC கோலா சிலாங்கூரில் நடைபெற்றது. இன்நிகழ்வை சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அதிகாரப்பூர்வமாக தொடக்கித்து வைத்தார்.
இந்தப் பயிலரங்கு மாநில மனிதவள நிரந்தரக்குழுவின் தலைமையில், STDC மற்றும் PERKESO சிலாங்கூரின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு முகாமைகள் இணைந்து செயல்படுவது மாநில தொழிலாளர் சமூகத்தை முன்னெடுக்கச் செய்யும் முக்கியக் கட்டம் என அவர் தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் பேசிய அவர், இன்றைய வேலை கல்வி அறிவு மட்டுமின்றி, திறன், தன்னம்பிக்கை, மனிதநேய தொடர்புத்திறன் மற்றும் தொடர்ந்த கற்றலையும் சமமாகக் கோருகிறது என கூறினார். இதன்படி, பயிலரங்கு பங்கேற்பாளர்கள் தொழில் உலகின் தற்போதைய தேவைப்பாடுகளை அறிந்து கொள்ளவும், வேலை வாய்ப்பு நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், தொழில் வழிகாட்டலை பெறவும் உதவும் எனவும் தெரிவித்தார்.
“Selangor Career Launchpad – 2025” திட்டம் பட்டதாரிகள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்தை நாடுபவர்கள் ஆகியோருக்கான உதவி மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பயிற்சியைத் தாண்டி, சந்தை பகுப்பாய்வு, தொழில் ஆலோசனை மற்றும் சரியான வேலை பொருத்தம் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது.
மாநில அரசு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு மனிதவள மேம்பாட்டை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாக வீ. பாப்பாராய்டு வலியுறுத்தினார். ஒவ்வொருவருக்கும் நிலையான, நல்ல வருமானம் தரும் வேலை கிடைப்பது, அவர்களின் குடும்பத்தையும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்தும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வை நிறைவுசெய்யும் முன், STDC, PERKESO சிலாங்கூர், UPEN, UPPS, ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார். இந்நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்களின் தொழில் பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.


