ஷா ஆலம், நவம்பர் 29 — 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகர்களை ஒருங்கிணைத்துள்ள சிலாங்கூர் தொழில் முனைவோர் கண்காட்சி (SelBiz) மூன்று நாள் நிகழ்ச்சியில் RM 1 மில்லியன் வரை பரிவர்த்தனை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை மாநில நிர்வாக சபை உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகளில் மொத்தம் கிட்டத்தட்ட RM 10 மில்லியன் பரிவர்த்தனை பதிவாகி உள்ளதால் இந்த இலக்கு யதார்த்தமானது என்று அவர் கூறினார்.“செல்பிஸின் நான்காவது பதிப்பில் 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தொழில் முனைவோர்களுக்கான விற்பனை இடம் மட்டுமல்லாமல், நிதி நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், உயர்கல்வி மையங்களையும் இணைத்து வணிக வலையமைப்பை விரிவு படுத்தியுள்ளோம்.இந்த ஆண்டு சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS) தொழில் முனைவோரின் தற்போதைய முக்கிய தேவையான தொழில்நுட்ப ஆற்றல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது” என்று இன்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் செல்பிஸ் நிகழ்வை தொடக்கி வைத்து அவர் பேசினார்.மாநிலத்தில் பெரும்பாலான தொழில் முனைவோர், பிளாட்பார்ம் சிலாங்கூர் (PLATS), சிலாங்கூர் இளைஞர் சமூகம் (SAY), யயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலத் திட்டங்கள் மூலம் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு உயர்மட்டத் தகவலமைப்பைக் காட்டியுள்ளதாக நஜ்வான் கூறினார்.“சிறு வியாபாரிகள் உட்பட தள்ளுவண்டிக் கடைக் காரர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகின்றனர். சந்தைத் தேவைக்கு ஏற்ப அனைவரும் மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; அதற்கு சிறிது காலம் ஆகலாம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.செல்பிஸ் வெறும் விற்பனைத் தளம் மட்டு மல்ல; வியாபாரப் பேச்சுகள், வழிகாட்டுதல் அமர்வுகள், தொழில் பகிர்வு நிகழ்வுகள், குடும்பத்துடன் மகிழக்கூடிய பொழுதுபோக்குகளையும் உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்தார்.“தொழில்முனைவோரை மேம்படுத்துவ தோடு, உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் மகிழ நேரம் செலவிடக் கூடிய இடமாகவும் இந்தக் கண்காட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார் நஜ்வான்.200-க்கும் மேற்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள், முதன்மைப் பரிசாக 5 நாள் பயணக் கப்பல் பயணம், டயாங் நூர்ஃபைசா, அதிரா சுஹைமி, பிளாக் ஹனிபா, ஸாருல் அம்ப்ரெல்லா போன்ற பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் செல்பிஸில் இடம்பெற்றுள்ளன.2022-இல் PKNS அறிமுகப்படுத்திய செல்பிஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை (SMEs) வலுப்படுத்தவும், உள்ளூர் பொருட்களை பரந்த சந்தைக்கு கொண்டு செல்லவும், சிலாங்கூரின் தொழில் முனைவோர் சூழலை வலுப்படுத்தவும் உதவும் மூலோபாய தளமாகும்.
செல்பிஸ்: 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு, மூன்று நாட்களில் RM 1 மில்லியன் பரிவர்த்தனை இலக்கு
29 நவம்பர் 2025, 9:46 AM



