ஷா ஆலம், நவம்பர் 28 — மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று மதியத்திற்கு பிறகு 798 குடும்பங்களைச் சேர்ந்த 3,023 பேரிலிருந்து 884 குடும்பங்களைச் சேர்ந்த 3,310 பேராக உயர்ந்துள்ளது.
சமூக நலத்துறையின் இன்ஃபோ பெஞ்சானா இணையதளத்தின் படி, சிப்பாங், கோலா லங்காட், கிள்ளான், கோலா சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய ஐந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படும் 24 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
இதேநேரம், இன்று அதிகாலையில் மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையை தாக்கிய வெப்பமண்டல புயல் சென்யார் வலுவிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல பகுதிகளில் மழை தொடரும் என்பதால் வெள்ள அபாயம் இன்னும் உயர்ந்து உள்ளது.மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (MetMalaysia) பொது இயக்குநர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப், கரையை தாக்கிய பிறகு வலுவிழந்த சென்யார் இப்போது பகாங் நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறினார்.
நேற்று MetMalaysia எச்சரிக்கை விடுத்திருந்தது: சிலாங்கூர், பேராக் மற்றும் பகாங்கின் சில பகுதிகளில் சென்யார் புயலால் 50 கிமீ/மணி நேரம் வரை காற்று வேகமும், 24 மணி நேரத்தில் 200 மிமீக்கு மேல் மழையும் பெய்யக்கூடும் என்று.மலாக்கா நீரிணை பகுதியில் உருவான முதல் வெப்பமண்டல புயல் என்ற பெருமையை சென்யார் பெற்றுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடுமையான வானிலையும் தொடர் மழையும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மாநில அரசு வெப்பமண்டல புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையை உயர்த்தியுள்ளது. மாநில வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய நிகழ்வை எதிர் கொள்வதால் மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நேற்றிரவு மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், மாநிலம் முழுவதும் 244,000 குடியிருப்பாளர்களை தங்க வைக்கும் வகையில் 1,173 நிவாரண மையங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த, 344 உபகரணங்கள் (நான்கு சக்கர வாகனங்கள், கனரக லாரிகள், 227 படகுகள் உள்பட) மாநிலம் முழுவதும் மூலோபாய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. உதவிப் பொருள்கள் விநியோகம், பாதிக்கப்பட்டோர் வெளியேற்றம், தேடுதல்-மீட்புப் பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படும்




