கோலாலம்பூர், 26 நவம்பர்: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள நிலை மழை அளவின் மீது மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பல்வேறு காரணகளும் அதனை நிர்ணயிக்கின்றது என்று மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியாவின் செயல்பாட்டு துணை டைரக்டர் ஜெனரல் அம்புன் டின்தாங் தெரிவித்துள்ளார்.
வேகமான வளர்ச்சி, நில அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை கடந்த காலத்தில் இருந்த அதே அளவு மழை பொழிந்தாலும் இன்று வெள்ளத்திற்கான விளைவுகளை மாறுபடச் செய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலும், தற்போதுள்ள வானிலை அமைப்புகளுக்கு தாக்கம் ஏற்படுத்தி, அதிக அளவில் கடுமையான மற்றும் திடீர் வானிலை நிகழ்வுகளை உருவாக்குகின்றன. உலக வெப்பநிலை ஒரு டிகிரி உயர்ந்தாலே வளிமண்டலம் 7 சதவீதம் கூடுதல் ஈரப்பதத்தைச் சேமிக்கிறது; இதுவே பெரு மழைப் பொழிவை ஏற்படுத்துகிறது,” என்றார். மேலும், கடல் வெப்பநிலை உயர்வு பவளப்பாறைகள் வெள்ளைமையாக்கம், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்கி, மலேசியா போன்ற கடலோர நாடுகளுக்கு கூடுதல் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
“சமீபத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை தாக்கிய புயல்களின் வலிமையும், அவற்றின் அடிக்கடி தோன்றும் தன்மையும் உலக வெப்பமயமாதலின் நேரடியான தாக்கங்களாகும்,” என அவர் கூறினார். நாடு முன்னெச்சரிக்கையாக இருக்க மெட்மலேசியா அதன் குறியீட்டு முறைமையின் மூன்று கூறுகளான தரவு சேகரிப்பு, தரவு செயலாக்கம் மற்றும் தகவல் பரவல் ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
வானிலை மாதிரிகள் வழங்கும் ஆரம்ப எச்சரிக்கைகள் பொதுவாக மூன்று நாள் வரையிலானவை. ஆனால் வளிமண்டல மாற்றங்கள் கண்டறியப்படும் போதெல்லாம் தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் வெள்ளத்தில் பாதிக்க கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதைய வானிலை எச்சரிக்கைகளை கவனித்து, அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் மெட்மலேசியா இணையதளம், அதன் சமூக ஊடக தளங்கள் மற்றும் mycuaca செயலி வழியாக தற்போது நிலவும் வானிலைத் தகவல்களைப் பெறலாம் என்று கெட்டுக் கொண்டார்.


