கோத்தா கினாபாலு, நவ 25- சபா மாநிலத் தேர்தல் பரப்புரைக் காலம் நவம்பர் 15ஆம் திகதி தொடங்கியதில் இருந்து பெறப்பட்ட 85 முறைப்பாடுகளில், 53 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சுவரொட்டிகள், கொடிகள் மற்றும் பிற பரப்புரைப் பொருட்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான பல வழக்குகளும் அடங்கும் என்று சபா மாநிலப் காவல்துறை ஆணையர் ஜவுதேஹ் டிகுன் அவர்கள் கூறினார்.
அனைத்துத் தேர்தல் பரப்புரை ஊழியர்களுக்கும் 7,288 பரப்புரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தினத்தன்று சபா முழுவதும் 12,000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
"அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முகாமைத்துவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜன்சிகளுடனும் தேர்தல் ஆணையத்துடனும் கலந்துரையாடி, அனைத்தும் சீராக நடைபெறுவதை உறுதி செய்துள்ளோம்," என்று கோத்தா கினபாலுவில் உள்ள சபா மாநிலக் காவல் தலைமையகத்தில் முன்கூட்டியே வாக்களித்த பின்னர் அவர் தெரிவித்தார்.







