ஷா ஆலம், செப். 12 - இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் ஜோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டு பற்றுச் சீட்டுகள் முடியும் வரை அமலில் இருக்கும்.
கோத்தா கெமுனிங் தொகுதிக்கு 500 பற்றுச் சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டார்.
விண்ணப்பதாரர்கள் கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்தவர்களாகவும் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தைக கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார.
மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் (எஸ் எம்.யு.இ.) மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம் மற்றும் (எஸ்.எம்.ஐ.எஸ்.) திட்டத்தின் இலவச பற்றுச் சீட்டு பெறுவோர் மற்றும் பிங்காஸ் பங்கேற்பாளர்கள் தீபாவளி பற்றுச் சீட்டுத் திட்டத்தில் பங்குபெற முடியாது என அவர் சொன்னார்.
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரின் மைகார்ட் நகல், வாக்காளர் சான்று நகல் மற்றும் சம்பள அறிக்கையை உடன் கொண்டு வர வேண்டும். விண்ணப்பாரங்களை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் 30 ஆயிரம் வெள்ளி செலவில் 200 வெள்ளி மதிப்பிலான 22,150 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு 56 தொகுதிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தா கெமுனிங் தொகுதியில் தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
12 செப்டெம்பர் 2025, 8:16 AM