சிரம்பான், ஆக 19- இங்குள்ள செனாவாங், தாமான் ஸ்ரீ பாகியில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக சமையல்காரர் ஒருவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படட்டார்.
மாஜிஸ்திரேட் நூருள் சகினா ரோஸ்லி முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக 31 வயதான ஜூலாஸ்ரின் ஜக்காரியா தலையசைத்தார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் கூட பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் செனாவாங், தாமான் ஸ்ரீ பாகியில் உள்ள ஒரு வீட்டில் 28 வயதான முகமது அமிருல் ரஷீட் முகமது நிசாவின் நெஞ்சில் கத்தியால் குத்தி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக ஜூலாஸ்ரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, அல்லது 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் ராயா நிக் நூர் அகிலா சியர்பா நிக் ஜைடி பரிந்துரைக்கவில்லை. அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் அடுத்த அக்டோபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆடவரை கொலை செய்ததாக சமையல்காரர் மீது குற்றச்சாட்டு
19 ஆகஸ்ட் 2025, 7:42 AM


