கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி வரை சட்டத்தை மீறியதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.
"இதில் மொத்தம் 321,012 சூதாட்டம் தொடர்பான பதிவுகள், 119,273 மோசடி உள்ளடக்கம், 43,585 ஆபாச உள்ளடக்கம், 35,420 கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தல் உள்ளடக்கம் மற்றும் 38,818 போலி உள்ளடக்கம் ஆகியவை அடங்கும் என தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
எம்.சி.எம்.சி-இன் கோரிக்கையை தொடர்ந்து இவை வழங்குநர்களால் அகற்றப்பட்டன," என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட அந்த அனைத்து உள்ளடக்கங்களும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 588-இன் கீழ் சட்டங்கள் மற்றும் தள வழங்குநரின் சமூக வழிகாட்டுதல்களை மீறியுள்ளதால் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தியோ கூறினார்.
அரசு மலேசியா காவல்துறை (PDRM), உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN), பேங்க் நெகாரா மலேசியா (BNM) போன்ற அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தைக் கண்காணிப்பதை எம்.சி.எம்.சி. தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
--பெர்னாமா




