NATIONAL

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆடவர் அடித்துக் கொலை - மலாக்காவில் சம்பவம்

29 ஜூலை 2025, 1:50 AM
பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆடவர் அடித்துக் கொலை - மலாக்காவில் சம்பவம்

அலோர் காஜா, ஜூலை 29 - ஜாசின் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கார் நிறுத்துமிடத்தில்  மிகவும் ஒழுங்கீனமாக  நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் வேலையில்லாத நபர் ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 51 வயதான நபர் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாக்கா மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஜூல்ஹைரி முக்தார் தெரிவித்தார்.

பொது இடத்தில் ஆடை களைந்து அநாகரீகமாக நடந்து கொண்டது தொடர்பில்  குற்றவியல் சட்டத்தின் 377டி பிரிவின்  கீழ் அந்த நபர் மீது கடந்த 2003 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரண்டு முந்தைய குற்றப்பதிவுகள்  இருந்ததாக அவர் கூறினார்.

அவ்வாடவர் இரவு 7.26 மணியளவில் அந்த  அநாகரீகமான செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பல நபர்களால் துரத்தப்பட்டு தாக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாடவர் தப்பும் நோக்கில்  சுமார் 200 மீட்டர் தூரம் ஓடி  ஆற்றில் குதித்தார். பின்னர் அவரை கூட்டத்தினர்  மீண்டும் பிடித்து தாக்கினர் என்று அவர் சொன்னார்.

நேற்று  டுரியன் துங்காலில் உள்ள  மலேசியா மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற  மலாக்கா பள்ளிகள் விளையாட்டு மன்றத்தின்  தடகள வெற்றியாளர் போட்டியை தொடக்கி வைத்தப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கொலைக் குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகப் பாகிஸ்தானிய பிரஜை உட்பட 20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஏழு ஆடவர்கள் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.