NATIONAL

இணைய வழி கார் விற்பனை மோசடி- வங்கி அதிகாரி வெ. 241,700 இழந்தார்

28 ஜூலை 2025, 4:52 AM
இணைய வழி கார் விற்பனை மோசடி- வங்கி அதிகாரி வெ. 241,700 இழந்தார்

கோலா திரங்கானு, ஜூலை 28-  இணைய வாகன  கொள்முதல் மோசடிக் கும்பலின் வலையில்  சிக்கிய வங்கி அதிகாரி தனது ஊழியர் சேம  நிதி (இ.பி.எப்.)  மற்றும் சேமிப்பு பணத்தை  பறிகொடுத்தார்.

இந்த மோசடி காரணமாக அந்த வங்கி அதிகாரிக்கு 241,700 வெள்ளி இழப்பு  ஏற்பட்டதாக

கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.

பாதிக்கப்பட்ட 52 வயதுடைய அந்த ஆடவர் பயன்படுத்தப்பட்ட  கார் விற்பனை தொடர்பான விளம்பரத்தை கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி முகநூலில் பார்த்ததாக  அவர் சொன்னார்.

நான்கு சக்கர  இயக்க வாகனத்தை வாங்க ஆர்வமாக இருந்த அந்நபர் அந்த  சமூக ஊடக தளத்தில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, வாட்ஸ்அப் செயலி மூலம் சந்தேக நபரைத்  தொடர்பு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வங்கி அதிகாரி தனது அடையாள அட்டையின் நகலையும் கணிசமானத் தொகையையும் சிலாங்கூர், கோலக் கிள்ளானில்  செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதிக்கு முன்பணமாக வழங்கினார்.

கடந்த ஜூலை 9 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர் எட்டு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 241,700 வெள்ளியை 40 பரிவர்த்தனைகள்  மூலம் செலுத்தினார்.

அரச மலேசிய சுங்கத் துறையில் கைரேகைப் பதிவுக்காக  31,000 வெள்ளியை  கூடுதலாக செலுத்துமாறு கேட்டபோது தாம்  ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர்

உணரத் தொடங்கினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நேற்று காலை 9.37 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஸ்லி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.